வெள்ளி, 18 அக்டோபர், 2013


கோயில்கள் இன்று ஆன்மிகப் பரிபூரணத் தன்மையுடன் கட்டப்படுகின்றனவா என்பது கேள்விக்குரிய விஷயமே. படாடோபம் மற்றும் மற்ற நோக்கங்கள் பிரதானமாகப் போய் ஆன்மிகமும், பக்தியும் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை இன்று அதிகம் இருக்கிறது. தெய்வீக சக்தி சூரியனாய் ஒளி வீசிக் கொண்டு இருந்தாலும் அஞ்ஞானப் போர்வைக்குள் நம்மைக் கட்டிக் கொண்டு காரிருளில் மூடங்கிக் கிடக்கும் அவலம் அதிகம் இருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் கூட பக்தியுடனும், மனத்தூய்மையுடனும் கோயிலுக்குச் சென்றால் அஞ்ஞானப் போர்வை விலகி தெய்வீக அருளை முழுமையாகப் பெற முடியும்.

இப்படி முழுமையாக தெய்வீக அருளைப் பெற்றவர்கள் நாளாவட்டத்தில் தங்கள் உள்ளத்தையே கோயிலாக்கிக் கொள்ள முடியும். அப்படி திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார்.

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.”

உள்ளமே சிவன் உறையும் கருவறையாகும். ஊனாகிய உடம்பே கோயிலாகும். அக்கோயிலில் வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். இதனை உணர்ந்து, தெளிந்து ஞானம் அடைவதற்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவோர்க்கு வஞ்சனை செய்யும் ஞானேந்தியங்கள் ஐந்தும் பெரிய ஒளி பொருந்திய விளக்காகும் என்றும் திருமந்திரம் விளக்குகிறது.

ஆனால் அப்படி அகக்கோயில் அமையும் உயர்நிலை ஏற்படும் வரை தெய்வீக அருளைப் பரிபூரணமாகப் பெற புறக்கோயில்களில் முறையாகத் தொழுதல் மனிதர்களுக்கு அவசியமாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக